இலக்கிய இயக்கங்கள் – பகுதி – 3

நவீனத்துவம் (Modernism)

நவீனத்துவம் என்பது நாம் சற்று முன்பு குறிப்பிட்டது போல, 14-ஆம் நூற்றாண்டில் மதத்திடமிருந்தும் அரசுகளிடமிருந்தும், 17-ஆம் நூற்றாண்டில் அறிவிடமிருந்தும், 18-ஆம் நூற்றாண்டில் உணர்ச்சிகளிடமிருந்தும் தன்னுடைய தனி மனித இருப்பை வரையறை செய்து, தன்னை முன்வைத்துக் கொள்ளும் முயற்சியே. எதிலிருந்து விடுதலை அடைவது என்பதும் எதை முன்வைத்து அதைச் செய்வது என்பதுவுமே இந்தத் தேடல்களின் ஆதரமாக இருந்தது.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் முதல் பகுதிகளில் புகைப்படக் கலையின் வருகையும்  பிரெஞ்சு புரட்சிக்குப் பின்னான நாட்களும் தொழில் நுட்ப மாறுதல்களும்  இந்த ஒட்டுமொத்தப் பயணத்தை உச்சம் கொள்ளச் செய்தன. அதுவரையிலான விக்டோரியன் மதிப்பீடுகளின் பொருளின்மையை உணர்ந்து புதிய பண்பாட்டிற்கான தேடலை துவக்கி இருந்தனர்.

[singlepic id=52 w=800 h=600 float=center]

மார்க்ஸின் சமூகம் சார்ந்த கருத்துக்களும், பிராய்ட்டின் தனி மனிதன் சார்ந்த கருத்துக்களும், டார்வினின் இயற்கை சார்ந்த கருத்துக்களும், சசூரின் (Ferdinand de Saussure) மொழியியல் கோட்பாடுகளும், ஐன்ஸ்டீனின்  காலம் மற்றும் சார்பியல் கோட்பாடுகளும் மேற்கில் அதுவரை நிலவிவந்த சிந்தனைகளை உருமாற்றம் கொள்ளச் செய்தன. குடிமைப் பண்பு கொண்ட  சமூகம் , வரலாறு, தூய தர்க்கம், உள்ளுணர்வு மற்றும் இயற்கை என அணைத்து தரப்பையும் முன் வைத்து சிந்தனைகள் வெளிப்படத் துவங்கின.

1870-களில் வரலாறும் சமூகமும் இயல்பாகவே முன்னகர்ந்து கொண்டிருகின்றன என்ற கருத்து கடுமையான விமர்சனத்திற்குள்ளானது. எனவே நவீனத்துவர்கள் வரலாற்றை நிராகரித்து, தனி மனித இருப்பையே பிரதானமாக முன்வைத்தனர். விழுமியங்களை விடக் கலையே பெரிதாக எண்ணப்பட்டதால் கலையும் இலக்கியமும் பேசுபொருளை விட வடிவத்தை முதன்மையாகக் கொண்டன. வாழ்க்கை குறித்த ஒட்டுமொத்தப் பார்வை தவிர்க்கப் பட்டு குறுக்கு வெட்டுப் பார்வை முன் வைக்கபட்டது.

டார்வினின் பரிணாமக் கோட்பாடு, சமூகத்தில்  ஆன்மீகத்தின் முக்கியத்துவதையும் அறிவின் தனித் தன்மையையும் குறைத்தது. இதை இணைத்துக் கொண்டு மார்க்ஸ் முன்வைத்த முதலாளித்துவதிற்கு எதிரான கோட்பாடுகள் சிந்தனையில் தாக்கம் செலுத்தத் துவங்கின. இதுவரையிலான மானுட அறிவென்பது சிந்தனையாளர்கள்  இந்த உலகைப்பற்றி நமக்களித்த புரிதல்களே, மாறாக இன்றைய காலகட்டத்திற்கேற்ப உலகை மாற்ற வேண்டிய தேவை இருக்கிறதென்ற கருத்தை மார்க்ஸ் முன் வைத்தார்.

[singlepic id=48 float=center]

நகரமயமாக்கல் தீவிரமானது. அழகியலும் அறிவியலும் இணைந்த கட்டுமானங்கள் வரத் துவங்கின. புகைப் படைத்தாலும், தந்தியினாலும், விரைவான போக்குவரத்து வசதிகளாலும் காலம் என்ற கருதுகோள் மாறியது. அதுவரை மருமலர்ச்சிக் கால அறிவியலையும் சிந்தனையையும் கால மாற்றத்திற்கேற்ப சீர்படுத்தி விடலாம் என்ற சிந்தனை பின்னகர்ந்து, எவ்வளவு முயன்றாலும்  காலமென்ற அனுபவமே மாறி விட்ட நூற்றாண்டில் அவற்றை வைத்து எதுவும் செய்ய முடியாது என்ற முடிவுக்கு வந்தனர். 

இந்த பல்வேறுபட்ட சிந்தனைப் போக்குகளை கலைஞர்கள் தத்தம் துறையில் செயல்படுத்த முனைந்த இயக்கமே நவீனத்துவம் என்று நாம் குறிப்பிடும் இயக்கம்.

இதுவரை தத்துவத்திலிருந்து இலக்கியம் வழியாக பிற கலைகளுக்கு சென்ற கோட்பாடுகள், அந்த வழியைக் கைவிட்டு, தத்துவம் கலையுடனும், தத்துவம் இலக்கியத்துடனும் என இந்த பரிமாற்றம் சகல திசைகளிலும் நிகழத் தொடங்கியது. முரணியக்கத்தை முன் வைத்த ஹெகலுக்கு எதிராக கீர்கேகாடும்(Soren Kierkegaard) நீட்செவும் வைத்த  வாதங்கள் இருத்தலியம்(Existentialism) சார்ந்தவையாக இருந்தன.

மனப்பதிவுவாதம்(Impressionism), மனவெளிப்பாட்டுவாதம்(Expressionism), ராடிகலிசம், படிமவாதம்(Imagism) போன்ற இயக்கங்கள் கலையிலும் இலக்கியத்திலும் பெரும் மாற்றங்களைத் துவக்கின. எஸ்ரா பவுண்டின் படிமவாதம் இலக்கியத்தில் பெரும் அலையை தோற்றுவித்தது, இதுவே முறையாக வகைப்படுத்தப்பட்ட முதல் இலக்கியக் கோட்பாடாக கருதப்படுகிறது. கற்பனாவாதத்தால் நெகிழ்த்தப்பட்ட மொழியை, அதன் கட்டற்றதன்மையையும் மிகையுணர்ச்சியையும்  நீக்கி நேரடியான எளிய அதே சமயம் சீரான மொழியாக முன் வைத்தது.

இந்த முயற்சி இலக்கியத்தில்  அதன் அடிப்படைகளான கதைக்களன், கதைமாந்தர், எழுத்துமுறை, படைப்பில் காலத்தை கையாளும்முறை மற்றும் மொழி ஆகியவற்றை மாற்றி அமைப்பதாக இருந்தது.  உண்மைக்கு மேலாக கலையை, அதன் வடிவத்தை முன் வைத்ததால், வாழ்க்கையை முன்வைப்பது கலை என்பதிலிருந்து கலையை முன்வைப்பதே கலை என்றும் ஆனது.

[singlepic id=49 w=800 h=600 float=center]

பிராய்டின் அடக்கப்பட்ட உணர்வுகளின் தொகுப்பே மனிதன் என்ற சிந்தனையின் வழி,  மனித இருப்பு என்பது இதுவரை புரிந்து வைத்திருந்த அளவு எளிதான ஒன்றல்ல என்றும், மரபான கருவிகளால் புரிந்து கொள்ள இயலாத அளவு சிக்கலானது என்றும் முடிவிற்கு வந்தனர். அந்த ஆழங்களுக்குச்செல்ல நனவோடை உத்தியை பயன்படுத்தத் துவங்கினர். ஜேம்ஸ் ஜோய்சின்  யுலிசிஸ் மற்றும் விர்ஜினியா உல்பின் எழுத்துக்களைப் போல. இந்தப் படைப்புகளின் முக்கிய அம்சம் கதை மாந்தர்களை விட எண்ண ஓட்டங்களுக்கே அதிக முக்கியத்துவம் தரப்பட்டது என்பதே. மொழியின் மீதான அறிவின் தளையை அறுக்கமுயன்ற எழுத்துக்கள் இவை எனில், எண்ணங்களாலும் சூழலாலும் கட்டுண்ட மனிதர்களின் செயலாற்ற இயலாத  தயக்கத்தை முன்வைப்பதும் ஒரு வகை எழுத்தாக முன் எடுத்துச் செல்லபட்டது. காப்காவின் விசாரணை போல. 

நவீனத்துவ எழுத்தில் கதையோட்டத்தை விட அக ஓட்ட சித்தரிப்புகளே பிரதானமாக இருந்தன. கதையில் யதார்த்தத்தை முன்வைப்பதை விட கலைஞனின் கருதுகோளை யதார்த்தத்தை விட தீர்க்கமாக முன் வைப்பதை போக்காக கொண்டனர். சுருக்கமான கதை கூறலிலும், சிக்கலான இறுக்கமான மொழிநடையிலும் எழுதினர்.

[singlepic id=51 w=800 h=600 float=center]

உலகப்போர்களுக்குப் பின் வந்த படைப்புகள், ஒரு சமூகமாக மனிதன் வீழ்ந்த கதையை, பேரழிவிற்கு பிறகான வாழ்க்கையின்  சிதைவுகளை   மையப் பொருளாகக் கொண்டன. இலக்கிய வடிவிலும், மொழியின் வெளிப்பாட்டிலும் மரபார்ந்த வடிவங்கள் சிதைக்கப்பட்ட படைப்புகள் உருவாகப் பட்டன. ஸ்காட் பிட்ஸ்ஜெரால்டின் (Scott Fitzgerald) தி கிரேட் காட்ஸ்பி(The Great Gatsby) போல, வில்லியம் பாக்னரின் (William Faulkner) தி சவுண்ட் அண்ட் தி பியூரி (The Sound and the Fury) போல. வடிவத்திலும், கதைக்களனிலும், சித்தரிப்புகளிலும் சிதைவுத்தன்மை கொண்டிருந்தன, டி.எஸ்.எலியட்டின் வேஸ்ட் லேன்ட் போல. வாசகன் வரலாற்றை ஒழுங்குபடுதியே இந்த வகைப் படைப்புகளை அணுக முடியும். ஹெகலின் முழுமை குறித்த கருதுகோளுக்கு நேர் எதிராக இருந்தன இந்த வகைப் படைப்புகள். பின்னாளில் இது நவீனத்துவ இலக்கிய வடிவங்களில் முதன்மையானதாக மாறியது.

சமூகங்களின் சிதைவிலிருந்து, சித்தாந்தங்களின் சிதைவு வரை மனிதர்கள் கைவிடப்பட்டதன் வெவ்வேறு சித்திரங்களை அளிக்கும் படைப்புகள் வெளி வந்தன. தன்னை போஷித்து வந்த பீடத்திலிருந்து மன்னர்களையும், கடவுளையும் கடைசியாக அறிவையும் இறக்கி விட்டபின்பு மனிதர்கள் சென்று அடையும் வெறுமையையும் தனிமையும் வெளிபடுத்தும் படைப்புகளாக இவை இருந்தன. பிரான்ஸ் காப்காவும், காம்யுவும் இந்த வகை படைப்புகளுக்கு முன்னோடிகளாக இருந்தனர்.

[singlepic id=50 w=800 h=600 float=center]

சுருக்கமாகச் சொன்னால்,  அறுநூறு வருடங்களாக மனிதன் தன் அறிவையும், கனவையும் கொடுத்து வளர்த்த சமூகமும், தொழில் நுட்பமும் ஓன்று சேர்ந்து மனிதனை விட பெரிய இயந்திரமாக உருக்கொண்டது. தன் வாழ்வை  எளிமையாகவும் மேலானதாகவும் ஆக்குமென்று எண்ணிய சமூக மாற்றங்கள், மனிதனை தன்னில் ஒரு எளிய உறுப்பாக ஆக்கிக் கொண்டது. அறிவு அபாயமான ஆயுதங்களை உற்பத்தி செய்யவும், உணர்வு நுகர்வுசார்ந்தும், வளர்ச்சி வாழ்க்கையை நெருக்கும் நகரங்களாகவும் மாறியது. இந்த சூழலில் இருந்து வெளியேற முயலும் போராட்டமே நவீனத்துவ கலையானது.

இலக்கிய இயக்கங்கள் – பகுதி – 2

 

பகுதி – 2

மீ இறையியல் (Transcendentalism)

கற்பனாவாத இயக்கத்தின் நீட்சியாக அமெரிக்காவில் தோன்றிய இயக்கம் என்று மீ இறையியலை (Transcendentalism) குறிப்பிடலாம். கற்பனாவாதம் இயற்கையை முழுமையுடையதாகவும் மனிதனை குறைபாடுள்ளவனாகவும் கண்டபோது, மீ இறையியல் ஒவ்வொரு தனி மனித ஆன்மாவையும் பிரபஞ்சத்தின் முழுமையை உள்ளடக்கியதாகவும், கடவுளை உலகின் ஆன்மாக்களின் தொகுப்பாகவும் கண்டது. சமூகத்தின் வழியும் புலன்களின் வழியும் நம்மை வந்தடையும் புறவயமான அறிவின் எல்லைகளைச் சுட்டி, இயற்கையை அவதானித்து, அதிலிருந்து குறியீடுகளைப் பெற்றுக்கொள்வது வழியாகவும், உள்ளுணர்வு சார்ந்த அகவயமான தேடல்கள் வழியகவும் தனி மனிதன் அறிதலும் ஞானமும் பெற்று முழுமையை நோக்கிச் செல்லலாம் என்றது.  அவ்வாறு மேம்படுத்தப்பட்ட தனிமனிதனின் வழி சமூகத்திலும் மாற்றம் கொண்டுவர இயலும் என்றெண்ணியது.

[singlepic id=35 w=800 h=600 float=center]

கற்பனாவாதத்தில் சமூக மாற்றத்திற்கான உந்துதல்கள் இல்லாமல் அழகியலிலும், தனிமனித உணர்ச்சிகளிலும், தன்முனைப்பிலும் மட்டுமே கவனம் இருந்தது. அறிவொளிக்காலம் தனி மனிதனை சமூகத்தின் அங்கமாகக் கொண்டதென்றால், கற்பனாவாதகாலம் தனி மனிதனை இயற்கையின் அங்கமாகக் கண்டது. மீஇறையியல் இயற்கையின் முழுமையை தன்னுள்ளும் கொண்டுள்ள தனி மனிதன், தான் வாழும் சமூகத்தில் மாற்றம் கொண்டுவருதலைப் பற்றி பேசியது.

[singlepic id=41 w=800 h=600 float=center]

பெருகி வந்த நுகர்வுக் கலாச்சாரத்தை மறுத்து, எளிமையான வாழ்கை முறையையும், தற்சார்பையும் முன்வைத்தது. அதற்கான தூண்டலை கீழைத் தத்துவங்களிலும் , ஜெர்மானிய கருதுமுதல்வாதத்திலிருந்தும்  பெற்றுக் கொண்டது. இக்காலகடத்தின் முதன்மைப் படைப்பாளிகளாக எமெர்சன்,  தோரோ, மார்கரெட் புல்லர் போன்றவர்களைக் குறிப்பிடலாம்.

 விக்டோரியன் காலகட்டம் (Victorian Era)

19 -ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில்  இயந்திர மயமாக்கலும், நீராவி இயந்திரங்களின் வருகையும் தொழிற்சாலைகளில் உற்பத்தியை பெருக்கி, அதிக மக்களை மேலும் மேலும்  நகரங்களை நோக்கிக் கொண்டு சென்றது. வேளாண்மை நலிவடைந்து, தொழிற்சாலைகளில் வேலைதேடி ஏழை  விவசாயிகள் நகரங்களுக்கு குடிபெயர்ந்தனர். நகரங்களில் புதிதாக உருக்கொண்ட  முதலாளித்துவ நடுத்தர வர்க்கம் ஏழைகள் மீது ஆதிக்கம் செலுத்தத் துவங்கியது.

[singlepic id=37 w=800 h=600 float=center]

நாவல் என்ற வடிவம் இலக்கிய முக்கியத்துவம் பெறத்துவங்கியது இந்த காலகட்டத்தில் தான். அதுவரையிலும்,  கவிதைகளே இலக்கியத்தில் உச்சமாக கருதப் பட்டன. கவிதைகளில் சாத்தியப்படும் உன்னதமாக்கல்(Sublimation), நாவல் வடிவில் இயலாது என்பாதால், நாவல்கள்  கவிதைகளை விட தாழ்ந்த இடத்திலேயே வைக்கப் பட்டிருந்தன. விக்டோரியன் காலகட்டத்தில் எழுதிய சார்லஸ் டிக்கன்ஸ் (Charles Dickens) போன்றோர் இக்கருத்தை மாற்றி, நாவல் வடிவின் கலை வெளிப்பாட்டுச் சாத்தியங்களை நிறுவினர். கல்விகற்ற நடுத்தர வர்க்கத்தின் முதன்மை கலை வடிவமாக நாவல் மாறியதும், அதற்கென ஒரு வெகுஜன சந்தை சாத்தியப்பட்டது. இதழ்களில் தொடர்களாக நாவல்கள் பிரசுரமாகத் துவங்கின. டிக்கன்ஸ் இங்கிலாந்தின் புகழ்பெற்ற நாவலாசிரியராக அறியப்பட்டார், கலைஞர்களை பொதுமக்கள் பிரபலங்களாக கொண்டாடும்  போக்கின் முன்னோடியாக அவர் இருந்தார்.

இன்றும் நாவல்களிலும் திரைப்படங்களிலும் காணப்படும் நேர்கோட்டு கதை அமைப்பு முறை இந்தக் காலகட்டத்தில் தான் அறிமுகப்படுத்தப் பட்டது. கடினமான வாழ்க்கைச் சுழலில் இருந்து, கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சியால் இறுதியில் வெற்றி பெரும் லட்சிய நாயகர்கள் உருவகிக்கப் பட்டனர். நற்பண்புகள் அங்கீகரிக்கபடுதலும், தவறான செயல்கள் தண்டிக்கப்படுத்தலும் வழி, வாசகனின் மனதில் அற உணர்ச்சிகள் தூண்டப்பட்டன.

[singlepic id=38 w=800 h=600 float=center]

அதுவரையில் இருந்திராத அளவில், சமூகத்தின் பிரச்சனைகளை நேரடியாகப் பேசும் இலக்கியம் பொதுஜனங்களை அதிக அளவில் சென்றடைந்தது. அதன் வழி சமூக மாற்றத்தை கொண்டுவருவது, இலக்கியவாதியின் இலட்சிய பிம்பமாக மாறியது. மோசமான பணிச்சூழல், பரவலான வறுமை, குழந்தைத் தொழிலாளிகள், சமூகத்தில் பெண்களின் இடம் போன்ற பிரச்சனைகளை சித்தரித்து படைப்புகள் வெளிவந்தன.

கவிதைகளின் வடிவத்திலும் உள்ளடக்கத்திலும் மாற்றம் வந்தது. கவிஞர்கள் கருதுகோள் மற்றும் மீபொருண்மை சார்ந்த கற்பனாவாதக் கால படைப்பு மொழியிலிருந்து நகர்ந்து எளிய யதார்த்தவாத மொழியில், சமூகம் சார்ந்த விஷயங்களை எழுதத் துவங்கினர்.

 யதார்த்தவாதம் (Realism)

விக்டோரியன் காலகட்டத்திலேயே, பிரெஞ்சு புரசிக்குப்பின், பிரான்சை மையமாகக் கொண்டு உருவான இன்னொரு இயக்கம் யதார்த்தவாதம்.

அதுவரை, கலை வெளிப்பாடு என்பது, வாழ்க்கை எப்படி இருக்கவேண்டும் என்ற கற்பனையும் இலட்சியவாதத்தையும் முன்வைத்ததென்றால்,  யதார்த்தவாதம் வாழ்வின் யதார்த்தங்களை உள்ளது உள்ளபடியே கலையில் காட்ட முனைந்தது. கற்பனாவாதத்தின் கூறுகளான மிகைப்படுத்தப்பட்ட உணர்வு நிலைகள், நாடகீயத்தருணங்கள், மிகை  அலங்காரங்கள், அகவயமான பார்வை போன்றவற்றை மறுத்தது. சாமானியனின் வாழ்வு என்பது,  பெரும்நிகழ்களால், அதிரவைக்கும் திருப்பங்களால், தொடர் அவலங்களாலும் ஆனது அல்ல, எனவே படைப்பும் அந்தக் கூறுகளைக் கொண்டிருக்கவேண்டியதில்லை என்பதே யதார்த்தவாத எழுத்தின் சாராம்சம்.

[singlepic id=47 w=800 h=600 float=center]

சமகால மக்களின் அன்றாட வாழ்வை புறவய நோக்குடன் உண்மையாகவும் துல்லியமாகவும் காட்ட முற்பட்டது. புகைப்படக் கலையின் தோற்றமும், இலக்கியத்தில் இந்த புறவயமான யதார்த்தத்தின் சரிநிகர் சித்தரிப்பிற்கு உந்துதலாக இருந்தது. மனித உளவியல் ஆராய்ச்சிகளில் ஏற்பட்ட முன்னேற்றங்களின் தாக்கத்தையும் யதார்த்தவாத படைப்புகளில் காணலாம்.

சமூக காரணிகள் மற்றும் வாழும் சூழலே தனி நபரின் குண நலன்களையும் ஆளுமையையும் தீர்மானிக்கின்றன.   மனித அகம் என்பது பல்வேறுபட்ட உந்துதல்கள், அச்சங்கள் ஆசைகளால் ஆனது. அவை சூழ்நிலைக்கு ஏற்ப எப்படி ஒன்றோடொன்று முரண்படுகின்றன அல்லது இணைந்து செயல்படுகின்றன என்பதைப் பொறுத்தே அவனது ஆளுமை அமைகிறது.  யதார்த்தவாத படைப்புகள், இந்த அகப் போராட்டங்களை, புறவய நோக்குடன் வாசகனுக்கு முன்வைத்தன.

[singlepic id=43 w=800 h=600 float=center]

கதை கூறும் முறைகளிலும் மாற்றம் வந்தது. ஒற்றை நோக்குடன், அனைத்து கதைமாந்தர்களும் சம்பவங்களும் விவரிக்கப் படுவதற்கு பதிலாக, வெவ்வேறு கதாபாத்திரங்களின் அக ஓட்டங்கள் வழியாக அல்லது அவர்களின் பார்வைக் கோணத்தின் சித்தரிப்புகளினூடாக சம்பவங்கள் விவரிக்கப் பட்டன. இதில் கதாமாந்தர்களின் நம்பிக்கைகளும் முன்முடிவுகளும் கலந்தே வாசகன் முன் வைக்கப் பட்டன. கதைக்குள் இன்னொரு கதை போன்ற வடிவங்களும் வந்தன. இதுபோன்ற உத்திகளின் வழி, ஒற்றைப் படையாக அறுதியிட்டுக் கூற முடியாததும், அவரவர்கேற்ப மாறிக்கொண்டே இருக்கக் கூடியதுமான யதார்த்தத்தின் தன்மையை, இயன்ற அளவு துல்லியமாக வாசகன் முன் உருவாக்கிக் காட்ட முயன்றன.

மார்க் டுவைன் (Mark Twain), ஜார்ஜ் எலியட் (George Eliot), ஹென்றி ஜேம்ஸ் (Henry James) போன்றோர் யதார்த்தவாத எழுத்து முறைக்கு முன்னோடிகளாக இருந்தனர்.

இயல்புவாதம் (Naturalism)

யதார்த்த வாதம் மேலும் வளர்ச்சி பெற்று, அதன் தீவிர வடிவமாக இயல்புவாதம் உருப்பெற்றது. 19 -ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில்,   சார்லஸ் டார்வினின் பரிணாம வளர்ச்சிக் கொள்கையை, மனித சமுதாயத்தின் பிரச்சனைகளுக்கு பொருத்திப் பார்க்கும் போக்கு இருந்தது (Social Darwinism). அந்தப் போக்கின் தாக்கம் கொண்ட இலக்கிய வடிவம் என இயல்புவாதத்தைக் கூறலாம்.

[singlepic id=44 w=800 h=600 float=center]

மனிதனின் ஆளுமை, அவனது செயல்கள், நம்பிக்கைகைள் ஆகியவற்றின் உருவாக்கத்தில் சமூக காரணிகளும் வாழும் சூழலும் பாதிப்பு செலுத்தும் அளவிற்கே, அவனது பாரம்பரியப்பண்புகளும் இன வரலாறும் முக்கியத்துவம் பெருகின்றன என்ற கொள்கையை முன்வைத்து எழுதப்பட்டவையே இயல்புவாத படைப்புகள். அவை யதார்த்த வாதத்தின் அனைத்துக் கூறுகளையும் உள்ளடக்கி, உணர்ச்சிகளைப் பின்தள்ளி, மனிதனை இயற்கையின் பரிணாம வளர்ச்சியின் பகுதியாகக் கண்டு ஒரு பார்வையாளனின் அக விலகலுடன் யதார்த்தைச் சித்தரித்தன.

அதுவரையிலும் இலக்கியத்தில் இல்லாத அளவுக்கு இயல்புவாதத்தில் மனித மனத்தின் மிருகத் தன்மை கொண்ட இருண்ட பக்கங்களை வெளிபடுத்தும் படைப்புகள் வெளிவரத் துவங்கின. அவற்றின் பேசுபொருளாக இனவாதம், காமம், வன்முறை, சிந்தனைகளின் முற்சாய்பு மற்றும் இழிவுதன்மை போன்றவை  இருந்தன.  இயல்புவாத இலக்கியத்திற்கு சிறந்த உதாரணமாக எமிலி ஜோலாவின் ‘Les  Rougon-Macquart’ நாவலைக் கூறலாம்.